நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு பெரும்பான்மையின்மையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க பல்வேறு சுயேட்சைக் குழுக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் , கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்களுக்கும் இடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெலவத்தையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக பல சுயேட்சைக் குழுக்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன.
இதனிடையே, அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொது இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.