'கணேமுல்லை சஞ்சீவ' என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கொலையை திட்டமிட பயன்படுத்திய கைப்பேசி கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கொழும்பு குற்றப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசி மூலம் முக்கியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் சம்பவத்துடன், தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கொலைச் சம்பவத்திற்காக தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ கொலையின் பின்னர், இஷாரா செவ்வந்தி வெலிபென்ன பகுதிக்குச் சென்று, பொலிஸ் அதிகாரியொருவரின் அத்தையின் வீட்டில் தங்கியுள்ளார்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பொலிஸ் அதிகாரியின் மைத்துனர் மதுகம ஷானின் உதவியாளர் என்றும், அவரது வேண்டுகோளின் பேரில், தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த இஷாரா, பின்னர் தொடங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த வீடு மதுகம ஷானின் தோழி ஒருவருக்கு சொந்தமானதாகும்.கிட்டத்தட்ட ஒரு மாதமாக அந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் வெலிபென்ன மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இஷாரா செவ்வந்தியை அழைத்துச் சென்று பொலிஸார் பதுங்கி இருந்த இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு மதுகம மற்றும் தொடங்கொட பகுதிகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதுடன், சந்தேகநபர் தங்கியிருந்த வீடும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு அதிகாரிகள் வீட்டை சோதனை செய்தபோதும், அவர் மாத்தறை பகுதிக்கு தப்பிச்சென்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இஷாரா தொடங்கொட வீட்டில் தங்கியிருந்த போது மதுகம உட்பட பல பகுதிகளுக்கு சென்று பல பொருட்களை வாங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து சந்தேகநபர்களிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில்,மேலும் பலர் வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.