கோட்டா பதவி விலகும் வரை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கியிருப்போம் – சஜித் அணி

ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி, பின்னர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்வோம் என்றும்  ஜனாதிபதி பதவி விலகும் வரை அங்கேயே இருப்போம் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் இணையுமாறு அனைத்து மக்களையும் நாங்கள் அழைக்கிறோம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்மட்டத்தின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் கிளர்ச்சியில் பங்கேற்குமாறும் பாதுகாப்புப் படையினரையும் பொலிஸாரையும்  கேட்டுக்கொள்கிறோம் என்றும் மத்தும பண்டார கூறினார்.

மக்கள் இன்று தலைநகருக்கு வருவதை தடுக்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாசவேலையின் மூலம் ரயில் போக்குவரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.