வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைப்பு - சைவ மகா சபை கண்டனம்!


வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும், சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயலையும் சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.

காரணமானவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், சிவலிங்கமும், சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

சைவ மகா சபை மேலும் தெரிவித்துள்ளதாவது,

"மேற்படி சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும், இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகி தீர்வு காண வேண்டும்.

ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்பத்தகாத செயற்பாடுகள் தமிழ் சைவர்களின் மனதை ஆழமாக பாதித்து வருகின்றது.

இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும், செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம்." என தெரிவித்துள்ளது.