ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா : இதுவரை 670 பேர்


ஈரான் - இஸ்ரேஎல் மோதலை அடுத்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான ஈரானியர்களை ICE எனப்படும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அதிகாதிகள் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.


கடந்த வாரத்தில் மாத்திரம் 130 ஈரானிய பிரஜைகள் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அதிகாதிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க மக்களுக்கு எதிராக சதி செய்யும் ஈரானிய ஆதரவான நபர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது ட்ரம்ப் நிர்வாகம் குண்டுவீச்சு நடத்தியுள்ள நிலையில், ஈரான் ஆதரவு நபர்களால் சாத்தியமான பழிவாங்கும் நடவடிக்கை குறித்து அமெரிக்கா தற்போது கவலை கொண்டுள்ளது.


இதன் அடிப்படையில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்த அதிகாரிகள், இதுவரை 670 ஈரானிய பிரஜைகளை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள ஈரானிய பிரஜைகளில் ஒருவர், ஈரானிய இராணுவத்தில் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடும் வீரராக நான்காண்டுகள் பணியாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.


மேலும், ஜோ பைடன் ஆட்சியின் போது குறைந்தது 1500 ஈரானியர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குடிவரவு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட 1,504 ஈரானியர்களில், 729 பேர் ஜோ பைடன் நிர்வாகத்தால் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டவர்கள்.

தற்போது கைதாகியுள்ள ஈரானியர்கள் பலர் குடும்ப வன்முறை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வார இறுதியில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையின் அடிப்படையில் ஈரானிய பிரஜைகளைக் கைது செய்தனர். அமெரிக்காவில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சப்படும் ட்ரம்ப் நிர்வாகம், முக்கியமான அமெரிக்க நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வங்கி அமைப்புகள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி உறுதி என ஈரானிய அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஈரானியர்களின் இருப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


முன்னதாக, இஸ்ரேல் - ஈரான் மோதலின் போது மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ள 50,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் சவப்பெட்டிகளில் நாடு திரும்பும் நிலை வரும் என ஈரானிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.