'அருண' குமார என ஜனாதிபதி அநுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய ட்ரம்ப் : சமூக ஊடகங்களில் வைரல்


 
 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரியை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, 'அருண' குமார திசாநாயக்க என்று குறிப்பிட்டுள்ளார்.

 ஜூலை 9 திகதியிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ கடிதத்தலைப்பில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறான எழுத்துப்பிழை உள்ளது.


இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதோடு பல பயனர்கள் தவறை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேநேரம்  இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கு 30வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த கடிதத்தில் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி 44வீத வரியை விதித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் 14 வீத வரியை குறைத்து 30 வீத வரியை இலங்கை மீது டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (09) அறிவித்தார்.

இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், புருனே மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் 25வீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20வீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.