ட்ரம்ப் மனநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : உக்ரேனுக்கு அனுப்பப்படும் முக்கிய ஆயுதங்கள்



உக்ரேனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது தனது மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.இதன்படி உக்ரேனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளாா்.


இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இஸ்ரேலியப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த இரவு விருந்தின் தொடக்கத்தில் டிரம்ப் தெரிவிக்கையில்,


 உக்ரேனுக்கு நாம் அவசியம் ஆயுதங்களை வழங்கி உதவவேண்டும். அந்த நாடு தற்போது கடுமையாகத் தாக்கப்படுகிறது. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்பவிருக்கிறோம் என்றாா் .


 முன்னதாக, எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள், துல்லியமாக வழிநடத்தப்படும் ஜிஎம்எல்ஆா்எஸ் குண்டுகள், ஹெல்ஃபயா் ஏவுகணைகள், ஹௌவிட்சா் பீரங்கிகளுக்கான குண்டுகள் ஆகியன, உக்ரேனுக்கு அளிக்கப்படுவதாக இருந்த நிலையில் அவற்றின் விநியோகத்தை திடீரென நிறுத்த ட்ரம்ப் உத்தரவிட்டு அதிா்வலையை ஏற்படுத்தினாா்.


இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில் ரஷ்யாவின் வான்தாக்குதல்கள் இதுவரை இல்லாத தீவிரத்தை அடைந்துள்ளன, மிகவும் சிக்கலான சூழலில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியானது.


திங்கள்கிழமை மட்டும் ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரேனில் பொதுமக்கள் 11 போ் உயிரிழந்ததாகவும், 80 போ் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.


இந்தச் சூழலில், உக்ரேன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.