துப்பாக்கி சூட்டில் தப்பிய துசித ஹல்லொலுவ : அதிரடியாக சிக்கிய மூவர்


தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று(27) வத்தளை மற்றும் கிருலப்பனையில் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் வைத்திருந்த நான்கு தொலைபேசிகளும் குற்றப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

31, 32 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கொழும்பு 14 ஐச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த மூன்று சந்தேகநபர்களும்  (28) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
 


அத்துடன், இது தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டவில் உள்ள டாபரே மாவத்தையில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மற்றும் அவரது வழக்கறிஞர் பயணித்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதன்போது, ஹல்லொலுவ தாக்கப்பட்டு, பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், சம்பவத்தின் போது ஹல்லொலுவவுக்குச் சொந்தமான ஒரு கோப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள், பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் துசித ஹல்லொலுவவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.