500 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கல்லை விற்க முயன்ற சஜித் கட்சியின் அரசியல்வாதி அதிரடியாக கைது



அனுமதியின்றி 500 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற கண்டி, குண்டசாலை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உட்பட மூவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

லபுக்கலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த மூன்று சந்தேக நபர்கள், உரிமையாளருக்கு செழிப்பைத் தரும் என கூறி, இரத்தினக் கல்லை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
எனினும், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரத்தினக் கல்லை வாங்குபவர் போன்று ஒருவரை
அனுப்பி, அவர் பேரம் பேசி, இரத்தினத்தின் விலையை 500 மில்லியன் ரூபாவிலிருந்து 1 மில்லியன் ரூபாவாக குறைத்துள்ளனர்.

இந்த இரத்தினம் உண்மையான விலையுயர்ந்த கல்லா அல்லது போலியானதா என்பது குறித்த அறிக்கைக்காக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் அனுப்பப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
40 முதல்50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் வத்தேகம மற்றும் மடவல பகுதிகளில் வசிப்பவர்கள்.

தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையால் இரத்தினக் கற்கள் வியாபாரம் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை சந்தேக நபர்கள் வைத்திருக்கவில்லை என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.