பாரிய ரயில் விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர் : பாணந்துறையில் சம்பவம்


தென்னிலங்கையில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்திய ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபரின் புத்திசாதுரியமான செயற்பாடு காரணமாக பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தையும், பல விலைமதிப்பற்ற உயிர்களையும் நபர் காப்பாற்றியுள்ளார்.

பாணந்துறை ரயில் நிலையம் அருகே ரயில் பாதை உடைந்திருப்பதை குறித்த நபர் அவதானித்துள்ளார்.

இதன்போது அந்த ரயில் பாதை வழியாக ரயில் வருவதை அவதானித்துள்ளார்.
உடனடியாக அவர் தனது டி-ஷேர்ட்டைக் கழற்றி, அதை எடுத்துக் கொண்டு, ரயிலை நிறுத்தும் நோக்கில் முன்னோக்கி ஓடியுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் ஓட்டுனவரும் ரயிலை விரைவாக நிறுத்தியுள்ளார். இதனால் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.