விமானத்தில் வருகிறது கோட்டாவின் இராஜினாமா கடிதத்தின் மூலப் பிரதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் அவரது கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அது மின்னஞ்சலில் வந்ததால் அதன் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் சபாநாயகர் தரப்பு ஆராய்ந்து வருகின்றது.இந்தக் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து அடுத்ததாக கிடைக்கக்கூடிய விமானத்தில் கொழும்புக்கு இராஜதந்திரி ஒருவர் கொண்டுவருவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிலுள்ள இலங்கைத்தூதரகம் இந்த கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்று உடனடியாக கொழும்புக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபருடனும் சபாநாயகர் ஆலோசனை நடத்தியுள்ளார்.மூலப்பிரதி கிடைத்த பின்னரே ஜனாதிபதியின் இராஜினாமா குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் எனவும் கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.