கொழும்பு, குழந்தைகள் மருத்துவமனையில் பதிவான சம்பவத்தால் பரபரப்பு : தீவிர விசாரணை ஆரம்பம்


கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஏழாவது விடுதியில் உள்ள தாதியர் அலுவலகத்திற்குள் நேற்று காலை 11 முதல் 12 மணி வரையான நேரத்திற்குள் நுழைந்த ஒருவர், தாதியர்களின் பணப்பைகளைத் திருடிச் சென்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றபோது, சிற்றூழியர் ஒருவர் அவரைப் பிடிக்க முயன்றதாகவும், அவர் தனது பையில் இருந்த கத்தியால் சிற்றூழியரின் தலையில் தாக்கிவிட்டு மருத்துவமனையின் பின்புற சுவர் வழியாக தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மருத்துவமனை ஊழியர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


நோயாளிகளைப் பார்வையிட வந்ததாக பொய்யான காரணத்தை தெரிவித்த சந்தேக நபர் மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும், அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரைக் கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை நடந்து வருகிறது.