இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு


தொழில் நிமித்தம் இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து, எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எட்டப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
 
நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில், தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஈரான் மற்றும் இஸ்ரேலில் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
குறித்த இரண்டு நாடுகளிலும் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
ஈரானிலிருந்து 2 இலங்கையர்கள், தூதரக உறுப்பினர் ஒருவர் மற்றும் மாணவர் ஒருவரும் ஈரானின் எல்லையைக் கடந்து துருக்கிக்குப் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

 
அத்துடன், மேலும் 2 இலங்கையர்கள் டுபாய்க்கு பயணிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.