இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! - நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று   முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையில் இன்று(1) பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை, கடற்றொழில் மற்றும் கடற்படை படகுகளுக்கு விசேடமாக விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வீடுகள், வணிக கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகள் சேதமடைந்த நிலையில்,இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோர கடலில், இன்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம்.


சில நேரங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் திணைக்களத்தின் இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மிகவும் கொந்தளிப்பான கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 
இதேவேளை நிலவும் மோசமான வானிலை காரணமாக 14 மாவட்டங்களில் 7,239 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹட்டன் பகுதியில் நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றினால், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பொலனி, ஹட்டன் குடாகம, ஹட்டன் சித்தார தோட்டம் மற்றும் டிக்கோயா பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்தப் பகுதிகளில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாகவும் ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸார் ரஞ்சித் ஜெயசேன தெரிவித்துள்ளார்.

இந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் மத்திய மலைநாட்டில் கடுமையான சீரற்ற வானிலைதொடர்ந்தும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வீசிய பலத்த காற்று காரணமாக, ஹட்டன் பகுதி முழுவதும் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளதாகவும், மின் தடையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அட்டன் மின்சார சபையின் மின்சார கண்காணிப்பாளர் நிமல் சமரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நோர்டன்பிரிட்ஜில் உள்ள விமலசுரேந்திர நீர்மின் நிலையத்திற்கு செல்லும் வீதியில் முன்தினம் இரவு ஒரு பெரிய மரம் விழுந்ததால், நேற்று (31) அதிகாலை வரை வீதியின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.


இதே நேரத்தில், ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு நேற்று முன்தினம் (30) இரவு சரிந்து விழுந்ததால், கொட்டகலை மற்றும் தலவாக்கலை பகுதிகளுக்கு மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஹட்டன்-மஸ்கெலியா, நிவ்வெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீதே மரம் முறிந்து விழுந்துள்ளது.

மரம் முறிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும், இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 காலி மாவட்டத்தில்; - பத்தேகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்

 கேகாலை மாவட்டத்தில் - அரநாயக்க பிரிவுக்கும்

ழூநுவரெலியா மாவட்டத்தில் - அம்பகமுவ, நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்

இரத்தினபுரி மாவட்டத்தில் - இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுக்கும்

 கண்டி மாவட்டத்தில் - மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.