கல்னேவ பொலிஸார் தனது ஆசனவாயில் ஒரு குச்சியைச் செருகி கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ வீரர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரின் வாக்குமூலம் தொடர்பில் விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அனுராதபுரம் உதவி பொலிஸ் கண்காணிப்பாளருக்கு அனுராதபுரம் தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேகநபர், நேற்று நீதிமன்றத்திற்கு தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தவில்லை என்றும், அவரது சம்மதத்துடன் தான் அனைத்தும் இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
அதை குறித்த பெண்ணுக்கு எதிரான அத்துமீறல் என்று அழைப்பதில் தனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வாசலில் இருந்து வைத்தியர் தங்கும் விடுதி வரை கண்காணிப்பு கருவிகள் இருந்தால், அவற்றைச் சரிபார்த்து, அந்த நேரத்தில் அவரின் செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வைத்தியர் தன்னை ஒரு குற்றத்தில் சிக்க வைத்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தான் கைது செய்யப்பட்ட பின்னர், கல்னேவா பொலிஸ் அதிகாரிகள் தனது ஆசனவாயில் ஒரு குச்சியைச் செருகி கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், இதுவே தனது உட்புற இரத்தப்போக்குக்குக் காரணம் என்றும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்கப்பட்டபோதே சந்தேகநபர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்படி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.