ஆனையிறவு உப்பளம் முன் வெடித்த போராட்டத்தால் பதற்றம் - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்



 

ஆனையிறவு  உப்பள தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுளதால் அங்கு பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு கோரிக்கைககளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் (16) போராட்டம் இடம்பெற்ற நிலையில் அங்கு பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், போராட்டத்தை தடை செய்யுமாறு கோரி நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

ஆனையிறவு  தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளர்.


குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்றையதினம்  ஆனையிறவு உப்பளத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்தகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”ஆனையிறவு உப்பளத்தில் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர்.

எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்துச்செல்ல வேண்டும்.

மதியம் 10 மணி ஆனதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிநீரோ அல்லது தாங்கியில் உள்ள குடிநீரோ மிகவும் சூடாகி காணப்படும், ஆகையால் நாங்கள் அதனை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.


இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது, 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதைவிட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர்.

மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை.
 என தெரிவித்தனர்.