இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை மீது விதிக்கப்பட்ட வரியை குறைப்பதற்கு, எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன, சாதகமான முடிவொன்று கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், வொஷிங்டனுக்கு பேச்சுவார்த்தைக்காக செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழுவில், திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.