சீனாவுக்கான வரி.. மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைத்த அமெரிக்கா.. பின்னணி என்ன?



சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்; ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து பதிலுக்கு சீனாவும் நிறுத்தி வைத்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமுல்படுத்தியிருந்தார். இருப்பினும், அவ்வரிவிதிப்பைத் தொடங்குவதற்கு முன்பே வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்தார்.

எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது.
சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 வீதமாக  உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125 வீதமாக அதிகரித்திருந்தது.

மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது. இந்த வரி விகித உயர்வால், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

இதனால், அவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமாய் நடைபெற்றது.

இந்த நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிக்க, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவாா்த்தை இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துக்கொண்ட வரியை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வழிவகுத்தது. அத்துடன் பெரும்பாலான பொருள்கள் மீதான வரியை 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சீன பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோன்று அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதித்த வரி 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அத்துடன் முக்கியக் கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்குவதாக சீனா உறுதியளித்தது.

எனினும் இந்தத் தற்காலிக வரிக் குறைப்பு உடன்பாட்டை பின்பற்றவில்லை என்று இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான புதிய வா்த்தக ஏற்பாடு தொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்படி, தற்போது சீனாவுடனான அமெரிக்காவின் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்கள் மீது அமெரிக்கா 30 சதவீத வரியும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது சீனா 10 சதவீத வரியும் விதிக்கும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

முன்னதாக, மே 11 அன்று, இரு தரப்பினரும் 90 நாள் வரி இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். அது, கடந்த திங்கட்கிழமை 11 ஆம் திகதியுடன நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்த நீட்டிப்பு, நவம்பர் 10 வரை வரை தொடரும் எனத் தெரிகிறது. சீனாவும், தனது கட்டண இடைநீக்கத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கூறியுள்ளது.