கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த சிறீதரன்,
மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.
ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்டபோதும் அவர் என்னிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன்.
நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குரிய உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகிறோம் என சபை முதல்வரும், சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.இவர் நாட்டுக்கு திரும்பி வருகையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு ஏதும் கிடையாது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அபிலாசையும், கொள்கையும் அரசாங்கத்துக்கு கிடையாது.இருப்பினும் மாற்றீடாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை இந்த சட்டத்தை கவனமான முறையில் பொது பாதுகாப்பை கருத்திற் கொண்டு அமுல்படுத்த நேரிடும் என்றார்.