காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்ட மாணவன் : புல்மோட்டையில் பரபரப்பு


புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப் பாக மாறி மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் க.பொ.த உயர்தர
மாணவன் ஒருவருக்கும் க.பொ.த.சாதாரண தரம் பயிலும் 16வயது மாணவனுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதலாந் தவணைப் பரீட்சை பாடம் முடிவுற்ற நிலையில் வெளியேறிய மாணவனையே உயர்தரம் கற்கும் மாணவன் பின் தொடர்ந்து சென்று வாக்குவாதப் பட்டு சவரக் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நடந்துள்ளது.

படுகாயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
மாணவனை தாக்கி காயமேற்படுத்திய மாணவனை பொலிசார்கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரமே மேற்படி மோதலுக்கு காரணம் என அறிய முடிகின்றது.