பதுளை, நுவரெயா பகுதிகளில் கோரத்தாண்டவமாடிய புயல் காற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதுளை, நுவரெலியா உட்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் வீசிய புயல் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரிய சேதங்களும் பதிவாகியுள்ளன.
ஓஹியா - ஹோட்டன் சமவெளி பிரதான பாதையில் பாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதில் வாகனங்கள் அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் ஓஹியா ரயில் நிலையத்தின் மீது முறிந்து விழுந்த மரங்களால் ரயில் நிலையத்தின் கூரைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
நுவரெலியா பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று அதிகாலை நுவரெலியா-பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 
பின்னர், முறிந்து விழுந்த மரங்களை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு வலியுறுத்துகின்றனர்.

இதேநேரம் கடும் காற்று காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேநேரம் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை காலி, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கையானது நாளை (28) வரை சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.