'லக்கி பாஸ்கர்" திரைப்பட பாணியில் இலங்கை அரச வங்கியில் நடந்த சதி : அதிரடியாக கைதான காசாளர்



அரச வங்கிக் கிளை காசாளர் ஒருவர், தினசரி வட்டி சம்பாதிக்கும் முயற்சியில், வங்கியில் இருந்து 13.5 கோடி ரூபா பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சந்தேக நபரை,  இளம் பெண் ஒருவர் வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, வரவு வைக்கப்படும் எந்தவொரு தொகைக்கும் 10வீத தினசரி வட்டி விகிதத்தைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.

அதனைதொடர்ந்து, சந்தேக நபர் ஆரம்பத்தில் அந்தப் பெண் வழங்கிய கணக்கிற்கு  30 ஆயிரம் ரூபாவை  மாற்றி சில மணி நேரங்களுக்குள் வட்டியுடன் ரூ.33 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார்.

இதனால் உற்சாகமடைந்த சந்தேக நபர், கடந்த 29 ஆம் திகதி கடுவெல வங்கி கிளைக்கு கடமைக்காகச் சென்று, வங்கியில் இருந்து 13. 5 கோடி ரூபா பணத்தை ஒரே நாளில் அந்தப் பெண் கொடுத்த பல கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

இந்தக் கணக்குகளில் தனியார் மற்றும் அரசு வங்கிக் கணக்குகள் இரண்டும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் 30 இலட்சம் ரூபா முதல் .2 கோடி ரூபா வரையிலான தொகையை குறித்த பெண்ணுக்கு வரவு வைத்ததாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபரான காசாளர் நீதிமன்றில் முற்படுத்தபட்டதையடுத்து அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் அண்மையில் வெளியாகியிருந்து 'லக்கி பாஸ்கர்" திரைப்படத்தின் பாணியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.