உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையின் அனுதி குணசேகர


 

72ஆவது உலக அழகியைத் தெரிவு செய்யும் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர, இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் 20 பேரில் ஒருவராக உள்வாங்கப்பட்டு இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடை பெற்றுவரும் 72 ஆவது உலக அழகிப்போட்டியில் உலகநாடுகள் பலவற்றிலும் இருந்து கலந்துகொண்டிருக்கும் 107 போட்டியாளர் களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்ப டுத்தி ஏற்கனவே இலங்கையின் அழகியாகத் தெரிவாகியிருந்த அனுதி குணசேகர பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அப்போட்டியில் உலகளாவிய ரீதியில் சமூகங்கள் முகங்கொடுத்துவரும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் போட்டியாளர்கள் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் 'ஹெட் டு ஹெட்' சுற்றில் அனுதி குணசேகர மாதவிடாய் வறுமை தொடர்பில் விழிப்பு ணர்வூட்டக்கூடிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.  

ஏற்கனவே தன்னைப் பற்றிய அறிமுக உரையில் இலங்கையில் பெரும் எண்ணிக்கையான பெண்கள் அவர்களது மாதவிடாய் காலங்களில் செனிட்டரி நெப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதாரப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி பற்றியும், செனிட்டரி நெப்கின்களுக்கு அதியுயர் வரி அறவிடப்படுவது பற்றியும், அதன் விளைவாக மாதவிடாய் வறுமை நிலை உயர்வான மட்டத்தில்  காணப்படுவது பற்றியும் அனுதி குணசேகர சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமாத்திரமன்றி இதுபற்றி சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதற்காகவும், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அவசியமான சுகாதாரப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் தன்னால் ஸ்தாபிக் கப்பட்ட சஹேலி' எனும் சமூக நலனோம்பு அமைப்பு பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது 72 ஆவது உலக அழகிப்போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் 20 போட்டியாளர்களில் அனுதி குணசேகரவும் உள்ளடங்குவதுடன், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளிலிருந்து இறுதிசுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் ஒரேயொரு போட்டியாளர் இவராவார்.