ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு-பெண்ணொருவர் பலி!

கேகாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கேகாலை – ஹபுதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த பெண் களுகல்லவில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.குறித்த பெண் மூன்றாம் தரப்பினரால் சுடப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.நேற்றும் இலங்கையில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.