3000 வாகனங்களுடன் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : தீயை அணைக்க பெரும் போராட்டம்




அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலின் தீயணைப்பு அமைப்பைப் பயன்படுத்தி அவசரகால தீயணைப்பு நடைமுறைகளை கப்பலின் பணியாளர்கள் தொடங்கிய போதிலும், அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் விளைவாக, கப்பலின் 22 பணியாளர்கள் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் தப்பிச் சென்றனர்.

வடக்கு பசிபிக் பெருங்கடலில் பயணித்த ஒரு வணிகக் கப்பலால் இந்த பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த மாதம் 26ஆம் திகதி  சீனாவின் யன்தாய் துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

 கப்பலில் மின் வாகனங்கள் இருந்த பகுதியிலிருந்து முதலில் புகை வெளியானதாக அதை நிர்வகிக்கும் Zodiac Maritime  நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், இதேபோன்று ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூருக்கு கிட்டத்தட்ட 500 மின்சார கார்கள் உட்பட 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

--