உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்துள்ளது.
இதில் உக்ரேன் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
காணாமல் போன வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரேன் கடற்படை தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகின்றார்.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரேனில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யா, தற்போது உக்ரேன் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பலவகையான ட்ரோன்களின் தயாரிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தியது. போர்க்கப்பல்களை தாக்குவதற்காக ‘ஷீ ட்ரோன்களை’ தயாரித்தது.
தற்போது இதன் மூலம் முதல் முறையாக தாக்குதலை தொடங்கியுள்ளது. ரிமோட் மூலம் தண்ணீரில் படகு போல் செல்லும் இந்த ட்ரோன், போர்க் கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கும் திறன் வாய்ந்தது.
உக்ரேன் கடற்படையில் மிகப் பெரிய போர்க்கப்பலாக ‘சிம்ஃபெரோபோல்’ இருந்தது. இது கடந்த 2021-ம் ஆண்டு உக்ரேன் கடற்படையில் இணைக்கப்பட்டது.
லகுனா ரக போர்க்கப்பலான இதில் ரேடியோ, எலக்ட்ரோனிக், ரேடார் மற்றும் ஆப்டிக்கல் வேவு கருவிகள் இருந்தன.
இந்தக் கப்பல் டனுபே ஆற்றை கடந்து சென்றபோது, அதன் மீது ரஷ்யா, ‘ஷீ ட்ரோன்’ மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் உக்ரேன் போர்க்கப்பல் சிம்ஃபெரோபோல் வெடித்து சிதறியது. உக்ரைன் போர்க்கப்பலை, ஷீ ட்ரோன் மூலம் ரஷ்யா வெற்றிகரமாக தாக்கியது இதுவே முதல் முறையாகும்.
இந்த தாக்குதலில் உக்ரேன் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணி நடைபெறுவதாக உக்ரேன் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தக் கப்பல் மூழ் கடிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.