ஜெனிவாவை சமாளிக்கும் ரணிலின் நாடகம் - பதறும் பொன்சேகா!


ரணில் விக்ரமசிங்கவின் ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப்போகின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“பொதுஜன பெரமுனவினரை ஏமாற்றி பிரதமர் பதவியை சுவீகரித்து பின்னர் அதிபராகிய ரணில், முழு நாடாளுமன்றத்தையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் முட்டாளாக்கி இன்று சர்வதேசத்தையும் முட்டாளாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தாமல், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவும், ஜெனிவா மாநாட்டைச் சமாளிக்கவுமே ரணில் விக்ரமசிங்க தடை நீக்கம் என்ற இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

இந்தநிலையில் யார் மூலம் காய்களை நகர்த்தி சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமோ அந்த அமைப்புக்களையும் குறிப்பிட்ட நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் விரிவான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.