நடுவானில் ஆபத்தில் சிக்கிய விமானம் : பாகிஸ்தானின் செயலால் அதிர்ச்சி


 


டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சுமார் 220 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் கடும் புயலில் சிக்கிய போது, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உதவி கேட்ட நிலையில் அதனை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த குறித்த விமானம், புயலின் சிக்கிய ஒரு நிமிடத்தில் சுமார் 8,500 அடி உயரத்திற்கு கீழ் இறங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்போது, பாகிஸ்தான் வான்வெளியில் சிறிது நேரம் நுழைய விமானத்தின் விமானிகள் அனுமதி கோரியிருந்த நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிதர மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த விமானத்தின் குழுவினர் பெரும் ஆபத்துக்கு மத்தியில் புயலைக் கடந்து, காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கு குறுகிய பாதையைத் தேர்ந்தெடுத்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.


இந்த நிலையில், விமானம் தரையிறங்கிய பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விமானத்தின் முன்பகுதி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் நிகழ்ந்த போது பயணிகளின் அலறல் சத்தத்துடன், பதிவு செய்யப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், விமானத்தில் பயணித்தவர்களுக்கு எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.