ஜனாதிபதி அநுரவின் பெயரை கூறி மிரட்டி நிதி சேகரிப்பு - மதபோதகரை பொலிஸில் ஒப்படைத்த மக்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெயரையும் பயன்படுத்தி முறைகேடான வகையில் நிதி சேகரித்த சந்தேகத்தின் அடிப்படையில் மதபோதகர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

வன்முறையாக வகையில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்திய மதபோதகர் உட்பட இருவரே யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும் அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தியே நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்  நெல்லியடிநகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது நிதி கொடுக்க மறுத்தவர்களை அனுரவின் ஒளிப்படத்தைக் காண்பித்து பெயரைக் கூறி அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற்ற முற்றப்பட்ட போது வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த பின் விடுவித்துள்ளனர்.

குறித்த மதபோதகர்  மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந் நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்து நிதியை சேகரித்துள்ளார்.

ஆனாலும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.

நிதிகொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து சாவாய் என்றும், அனுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன் எனவும் அனுர ஆட்களைப் பற்றித் தெரியும் தானே என அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.