அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும் : பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரிவிப்பு


புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியப் பாரம்பரிய முறைக்கு அமைய மன்னர் சாள்ஸ்ஸை சந்தித்து தமது வெற்றியினை அறிவித்தார்.

பெக்கிங்ஹாம் மாளிகையில் மன்னரைச் சந்தித்து விட்டு கெய்ர் ஸ்டார்மர் நேரடியாகப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான இலக்கம் 10 டௌனிங் வீதிக்குச் சென்று தமது கன்னி உரையை நிகழ்த்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
 
" பாதுகாப்பற்ற உலக சூழலில் சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம். மகிழ்ச்சியான தொடக்கத்தை உணர்வோம். மாற்றத்திற்கான பணி உடனடியாக தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.  அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும். உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும். நாங்கள் பிரித்தானியாவை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்பதில் சந்தேகமில்லை என அவர் தெரிவித்தார்.

இதேநேரம் பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவின் துணை பிரதமராக எஞ்சலா ரெய்னர் மற்றும் நீதி செயலாளராக ஷபானா மாஹ்முட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பிரித்தானியாவின் முதலாவது பெண் சான்ஸ்லராக ரேச்சல் ரீவ்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வெளிவிவகார செயலாளராக டேவிட் லம்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் தொழிலாளர் கட்சி சார்பில் இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன் 19,000க்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார்.  

உங்களின் கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை உணர்கிறேன் என்றும், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை போட்டியிட்டு வென்றுள்ள கெய்ரை பொதுநலமிக்க மனிதன் என்றும் சுனக் தெரிவித்துள்ளார்.