ஓமந்தையில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம்!


வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று (08) சென்ற ஒருவர், தாசியா ஹாலியானஸ் என்ற இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் ஒன்றை அவதானித்த நிலையில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

இலங்கைக்கு மட்டுமே உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவ அரணை இனம் வன்னிக் காடுகளில் இருந்து வந்துள்ள போதும், மிக அரிய வகை உயிரினமாகவே உள்ளது. பெரும்பாலும் மரங்களில் இவ் உயிரினம் வாழ்ந்து வருகின்றது.

நாட்டின் ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதானால் 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் அரசாங்கத்தால் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், முத்திரை ஒன்றிலும் இதன் படம் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக் காலப்பகுதியில் ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இதே போன்ற அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.