மேலும் 3 உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய NPP

கொழும்பு மாநகர சபையில் (Colombo Municipal Council) ஆட்சியைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (16) மற்றுமொரு மாநகர சபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாநகர சபை (Ratnapura Municipal Council), மற்றும் தம்புள்ளை (Dambulla Pradeshiya Sabha) மற்றும் கல்பிட்டி பிரதேச சபைகளின் (Kalpitiya Pradeshiya Sabha) அதிகாரத்தையே இவ்வாறு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ. கட்டுகம்பல 14 வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி மேயர் வேட்பாளர் 12 வாக்குகளை பெற்றார்.

தம்புள்ளை பிரதேச சபை

அதேபோன்று தம்புள்ளை பிரதேச சபையின் தலைவராக இரகசிய வாக்கெடுப்பில்15 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் டபிள்யூ.எம். திலகரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் அதில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் 6 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் இன்று நியமிக்கப்பட்டார்.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 16 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் ஆசிக் 15 வாக்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது