இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவல்களை  பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்குவார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நகலை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரைக் கோரியுள்ளதாகவும் இந்த வாரத்தில் அது கிடைத்ததும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் கௌசல்ய நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகுவதாக 2023 செப்டம்பரில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை தொடர்பான வழக்கு தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதனையடுத்து அவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் அவரது பதவி விலகலை தொடர்ந்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்த விடயம் தொடர்பில் உடனடி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.