தவிர்க்கப்பட்ட பெரும் உயிராபத்து : கொழும்பில் விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த பாரிய குறைபாடு


 
கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லவிருந்த   அரச பேருந்தொன்று, இன்று அதிகாலை மட்டக்குளி பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் மட்டக்குளி பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த கண்டிக்கு செல்லும் பேருந்தே கொழும்பு 15 பகுதியிலுள்ள பஞ்ஞானந்த வீதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, பேருந்தில் அதிகளவான பயணிகள் இல்லாததால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தவிர எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

காயமடைந்த ஓட்டுநர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ப்ளுமென்டல் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் பேருந்தினுடைய டயரானது பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
மேலும் பஸ் பயணித்த போது சுக்கான் திடீரென இறுகியதால் இந்த விபத்து நேர்ந்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பஸ் இன்று காலை கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டிக்கு செல்லும் வழியில் இவ்வாறு விபத்து ஏற்பட்டிருந்தால் பாரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக மக்கள் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை விபத்துக்குள்ளாவதுடன் பெருமளவான உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி சேவையிலீடுபடுத்தப்படுவதால் அண்மைக்காலமாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமென தெரிவிக்கும் மக்கள் பொதுப்போக்குவரத்தை தவிர்த்தும் வருகின்றனர்.


இந்நிலையில், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும் எனவும் லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக அவர் சுட்டிகாட்டியிருந்தார்.