ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று அஞ்சி இலங்கை மக்கள் எரிபொருளினைப் பெற்று சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, நேற்றையதினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் குவிந்துள்ளனர்.
இதேநேரம் யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனாலும் திடீரென மக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழமை போன்று எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.