கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 42 வயதுடைய காயமடைந்த ஆணும், 70 வயதுடைய பெண்ணும் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் சிலாபத்தில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று சிலாபம் - விலத்தவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
“நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.