கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது பயங்கரவாத விசாரணைப் பிரிவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் 48 மணித்தியாலங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரான துமிந்த சில்வா, 6 மாதங்களுக்கு முன்பு தனது சமையல்காரர் மூலம் ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் உள்ள கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் வீட்டிற்கு இந்த துப்பாக்கியை அனுப்பி, அதை மறைத்து வைக்குமாறு அறிவுறுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணிடம் இந்த ஆயுதத்தை கொண்டு வந்து ஒப்படைத்த துமிந்த சில்வாவின் சமையல்காரரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை ஒரு சிறப்பு பொலிஸ் குழு அவிசாவளை பகுதிக்கு சென்றிருந்தது.
பொலிஸ் விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா ஹெவ்லொக் வீட்டுத்தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
பையில் டீ-56 துப்பாக்கி இருப்பது தெரியாமல் ஆயுதம் அடங்கிய பையை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டதாக அந்த பெண் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பை கடந்த 6 மாதங்களாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்ததுள்ள நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 20 ஆம் திகதியன்று, அந்தப் பெண்ணின் மகன்களில் ஒருவர் அந்தப் பையை சுற்றுலாவிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், காரின் பின்புறத்தில் குறித்த பையை வைக்கும் போது அதிலிருந்து துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. இதனை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் உடனடியாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் வந்து ஆயுதத்தை ஆய்வு செய்தபோது, அது நவீன டீ-56 துப்பாக்கி என்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.