கோட்டாபயவின் இலங்கை விஜயம் - பாதுகாப்பு தரப்பு அரசுக்கு அளித்துள்ள தகவல்

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தலைவர் ஒருவர் சிங்கள் ஊடகம் ஒன்றிடம் இவ்வாறான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்குவதற்கு விசா கிடைத்துள்ளதால், அதற்கு முன்னர் இலங்கைக்கு வருவாரா அல்லது அன்றைய தினம் வருவாரா என குறித்த ஊடகம் அவரிடம் வினவிய போது, இதற்கு உறுதியான பதில் ​​வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட வீசா காலத்திற்கும் மேலாக சிங்கப்பூரில் அவர் இருக்கின்றமை அந்நாட்டில் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பியுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பெரமுனவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது தற்போதுநல்லதல்ல என்றும் ஜனாதிபதி ரணில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது