மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு கோட்டாபய முயற்சி?


மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

பலநாடுகள் புகலிடம் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் மத்தியில் தன்னை பற்றிய எதிர்மறையான அபிப்பிராயங்களை மாற்றியமைத்து தன்னைமீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான கருத்தினை மாற்றுவதற்கும் தன்னை சுற்றியிருந்தவர்கள் தவறான முடிவுகளை எடுக்குமாறு தன்னை தவறாக வழிநடத்தினார்கள் என கிராம மக்களிற்கு தெரிவிப்பதற்குமான இரகசிய பிரசார நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகயிருந்தவேளை சென்ற கிராமங்களிற்கு ஊடகபிரமுகரும் பெரும் வர்த்தகருமான ஒருவரின் ஏற்பாட்டில் குழுவொன்று செல்கின்றது இவர்கள் முன்னாள் ஜனாதிபதி பற்றிய தவறான கருத்தினை மாற்றுவதற்காக மக்களுடன் உரையாடவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர் என இவர்கள் கிராம மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.