கல்லறைகளை வழிபட வழிவிடு...! இராணுவமே வெளியேறு...! முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை  இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.2023) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயன்கிட்டவில்லை இந்நிலையில் இராணுவத்தை வெளியேறுமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கல்லறைகளை வழிபட வழிவிடு கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு, மிதிக்காதே மிதிக்காதே புனிதர்களை மிதிக்காதே, அழவிடு அழவிடு அம்மாக்களை அழவிடு, விளக்கேற்றுவோம் விளக்கேற்றுவோம் பிள்ளைகளுக்கு விளக்கேற்றுவோம், கல்லறைகளை அழிப்பதும் புத்தனின் போதனையா போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்,


குறித்த போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பிரதேச சபையின் தபிசாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.