இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாரா செவ்வந்தி மாறுவேடத்தில் நாட்டிற்கு வர முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஷாரா செவ்வந்தி துபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் 'கனேமுல்லே சஞ்சீவவை கொல்ல 'கமாண்டோ சாலிந்த' ஏற்பாடு செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தியை கைது செய்ய இன்டர்போலின் உதவி கோரப்பட உள்ளது.
இந்நிலையில் இஷாராவின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்தபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மாறுவேடத்தில் இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு வர முயன்றதாகவும் 'கெஹல்பத்தர பத்மே' தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இறுதிச் சடங்கு நிகழ்வை சுற்றி உளவுத்துறை அதிகாரிகளின் கடுமையான பாதுகாப்பு இருந்ததால், பயணம் ஆபத்தானது என்று கூறி பத்மே அவரை வரவிடாமல் தடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலக நபர்களான 'பாகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோர், தெற்கு மாகாணத்தில் நடந்த பல கொலைகள் தொடர்பான பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய இந்த விசாரணைகளில், இந்தக் கொலைகள் அவர்களின் தொடர்புடன் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவற்றில் முக்கியமானது, பெப்ரவரி 19 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் அருண விதானகமகே, அல்லது 'கஜ்ஜா', அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதாகும்.
இரகசிய தகவல்
'பாகோ சமன்' என்பவருக்குச் சொந்தமான ரூ.350 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் இருப்பு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த மூன்று கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு குழந்தைகளும் கஜ்ஜாவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
மேலும், மித்தேனியவின் தோராயாவில் உள்ள காட்டுப் பகுதியில் இரண்டு பேரைக் கொல்லும் ஒப்பந்தத்தையும் அவர்கள் கையாண்டிருப்பது தெரியவந்துள்ளது.
மலேசியாவில் மறைந்திருக்கும் தருண் என்ற பாதாள உலக உறுப்பினரால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை, தெற்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 'பாகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் என்று போதைப்பொருள் விவகாரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.