சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு முன் வைக்கப்பட்ட மலர்வளையம்! காலியில் பரபரப்பு சம்பவம்!


நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில்,

காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவர் மலர் வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஒன்றை வைத்துச் சென்றுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (18) காலை பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரி காலி சிறைச்சாலையின் ஒழுக்காற்றுப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

காலி சிறைச்சாலைக்கு வெளியே இருந்து வீசப்படும் பொதிகளில் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புகையிலையை குறித்த அதிகாரி கண்டு பிடித்துள்ளதாகவும், வெளியில் இருந்து வீசப்பட்ட பொதி ஒன்றையும் இந்த அதிகாரி கண்டு பிடித்துள்ளார்.

இதன்போது, கைதி ஒருவர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அது தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த அதிகாரியின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.