எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு



ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது.


இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது.