எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்!

நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் தொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.நாளாந்தம் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் அதேவேளை, அதற்கு மேலதிகமாக 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான எரிபொருளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

இன்று நள்ளிரவு வரை தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதனிடையே டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களையும் எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி விநியோகிப்பதற்கு தம்மிடம் கையிருப்பு உள்ளதாகவும் அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களினதும் உற்பத்தி நடவடிக்கைகள் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.எதிர்கால எண்ணெய் விநியோகத்திற்கு தேவையான கொள்முதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனால் எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.