ரணிலை மீண்டும் சுற்றிவளைக்க தீர்மானம் : நேற்று நீதிமன்றுக்கு வந்த புதிய வழக்கு



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது

எப்பாவல பொஸ்பேற்றை உலக சந்தை விலையை விட மிகக் குறைவான விலைக்கு மூன்று தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் அரசாங்கத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் 10,000 மெட்ரிக் தொன் எப்பாவல பொஸ்பேற்றை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்தது.

இது தொடர்பில் 2023 ஜூலை மாதம் 6ஆம் திகதி, லங்கா பொஸ்பேற் லிமிடெட் நிறுவனம் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறிவித்திருந்தது.
சட்டபூர்வ அதிகாரமின்றி, இதற்கான ஏற்றுமதி உரிமம் வழங்கவும் குறித்த நிறுவனம் பரிந்துரைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொடுக்கல் வாங்கல் சட்ட விரோதமானது எனவும் இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட சில தரப்பினர் இந்தமனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொஸ்பேற் ஓர் முக்கியமான கனிய வளம் என்பதுடன் பல்வேறு உற்பத்திகளுக்கு இந்த கனிய வளம் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


இதேநேரம் தான் கைது செய்யப்பட்டிருந்த போது தனக்காக முன்வந்த தனது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி, அவர்கள் அனைவரையும் சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.


 'நான் கைது செய்யப்பட்டிருந்த போது எனக்காக முன்வந்த இணைத்தளங்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். பின்னர் நான் உங்களை சந்திக்க எதிர்பார்க்கின்றேன். நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதன் போது அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது