தேரரின் எதிர்ப்பால் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் : புல்மோட்டையில் சம்பவம்


 

புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியில் பௌத்த தேரர் ஒருவரின் செயற்பாட்டால் மௌலவி ஒருவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


திருகோணமலை, புல்மோட்டை -02, பொன்மாலைக்குடாவை சேர்ந்த சிரேஷ்ட ஆலிம் மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் நேற்று (12) சுகயீனமுற்றிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.
குறித்த ஜனாஸா இன்று (13) புல்மோட்டை பொன்மலைக்குடா முஸ்லிம் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த ஜனாஸா அடக்கத்திற்கு எதிராக புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி என்பவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரியும் புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பொது மக்களின் உதவியுடன் குறித்த ஜனாஸா நல்லடக்கம் காலை 10 மணியளவில் பொன்மலைக்குடா மையவாடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு சற்று பதற்றமான சூழல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.