ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

நேற்றையதினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சமுக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என  மேலும் தெரிவித்துள்ளார்.