தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி வகுக்கும் சூழ்ச்சி : சூடு பிடிக்கும் அரசியல்

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய இந்த ஆண்டின் இறுதிக்கு முன்னதாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத்தை கலைக்க அனைத்து உரிமைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டில் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென ரணில் விக்ரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கும் சிலரும் கருத்து வெளியிட்டிருந்தாலும், தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாகவே, அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.