தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு

சிவப்பு மஞ்சள் கொடிகளைப் பாவிக்கக் கூடாது என்றால், முதலில் இலங்கையின் தேசியக் கொடியை மாற்றுங்கள் என  சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

நினைவேந்தலுக்கு தடை கோரி ஊர்காவற்றுறை நீதிமன்றத்திலே பொலிஸார் கடைசி நேரத்தில் தாக்கல் செய்த வழக்கில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வழக்கை தாக்கல் செய்த பொலிஸார், நாங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைவு கோரப்போவதாகவும், தடை செய்யப்பட்ட சிவப்பு மஞ்சள் நிறங்களை பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள்.

அவர்களுடைய வாதங்களை நாங்கள் முறியடித்திருக்கின்றோம். சிவப்பையும் மஞ்சளையும் பாவிப்பது தடை செய்யப்பட வேண்டும் என்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது இலங்கையின் தேசியக்கொடி தான் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்.

இலங்கை தேசிய கொடியில் இருக்கின்ற சிவப்பு மஞ்சள் நிறங்களை எடுத்துவிட்டு வாருங்கள். அதன்பின்னர் நாங்கள் சிவப்பு மஞ்சளை தடை செய்வதற்கு தாயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

பொலிஸாரின் தடை நிராகரிக்கப்பட்டுள்ளது. தீபங்கள் ஒளிரும். மக்கள் அச்சம் இன்றி அணி திரளலாம்” என்றார்.