யாழில் நேற்றிரவு கொடூரமாக தாக்கப்பட்ட அரச வேட்பாளர் : மர்ம நபர்கள் நாசகார செயல்

யாழில் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளர் மீதும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு யாழ்.  நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் மு.அமிர்தமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினர் கணபதிப்பிள்ளை ஆகியோரே தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

 தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகளில் அவர் ஈடுபட்ட பின்னர் நேற்று இரவு வீட்டுக்குத் திரும்பிய வேளை வீட்டின் அருகில் மறைந்திருந்தோர்  வேட்பாளர் மீது பொல்லுகளால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், அதனைத் தடுக்கச் சென்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தலையில் காயமடைந்த வேட்பாளர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.